வங்கக் கடலில் உருவான "ஹுட்ஹுட்' புயலானது ஞாயிற்றுக்கிழமை மதியம் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிஸாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது. இந்த புயலால் ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.
ஆந்திரம்: புயல் காரணமாக, ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் பலத்த சேதமடைந்தன. குடிநீர் விநியோகமும், மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் பெருமளவு சேதமடைந்துள்ளன. விமான சேவை, ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன.