Saturday 8 August 2015

செல்(லும்) கோபுரம்



நமது செல் கோபுரங்கள் விரைவிலேயே 
நம்மை விட்டு செல்லும் கோபுரங்களாகி விட்டன.

BSNL வசம் உள்ள ஏறத்தாழ ரூ.20000/= கோடி மதிப்பிலான 
65000 செல் கோபுரங்களை தனி அமைப்பாக மாற்றுவதற்கு 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளதாக
 செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்த பணியைச் செய்து முடிக்க 
தனி அமைச்சர்கள் குழு அமைக்கப்படும்.
அந்தக்குழு தனி நிறுவனம் அமைப்பதற்கான நடைமுறைகளை ஆராய்ந்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பும்.

செல் கோபுரங்களை தனியாக பிரிக்கக்கூடாது என்பது 
ஊழியர் கூட்டமைப்பின் கோரிக்கையாகும். 
இதனால் BSNL மேலும் நலிவடையும் 
என்பது ஊழியர் தரப்புக் கருத்து. ஆனாலும் வழக்கம் போலவே நிர்வாகமும் அரசும் ஊழியர் தரப்பை ஊதாசீனப்படுத்தி விட்டு 
தாங்கள் நினைப்பதையே செயல்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் BSNLக்கு  169.16 கோடியும், 
MTNLக்கு 458.04 கோடியும் SPECTRUM REFUND
அலைக்கற்றை ஒப்படைப்பு பணமாக  திருப்பிக் கொடுக்க 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

நாம் திருப்பி ஒப்படைத்த 800 MHz அலைக்கற்றையை 
கடந்த மார்ச் மாதத்தில் தனியாருக்கு   
20 ஆண்டுகளுக்கு ஏலம் விட்டு 
அரசு ஏறத்தாழ 4000 கோடி லாபம் 
சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாம் செலுத்திய 600 கோடி ரூபாய் பணத்தை 
நமக்கு திருப்பி அளித்து விட்டு 
நமது 20000 கோடி சொத்தான செல் கோபுரங்களை 
நம்மிடமிருந்து அரசு அபகரித்துள்ளது.
இது என்ன வித்தையோ? 

தமிழகத்தில் பல போராட்டக்காரர்கள் 
செல் கோபுரம் ஏறி போராடுகிறார்கள்... 
இன்று  நாம்... 
செல் கோபுரத்தையே காப்பதற்காக 
போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.